எங்கள் காணிகளை விடுவிக்க இன்னும் எத்தனை வாரங்கள் போராட வேண்டும்?” – 20ஆவது வாரத்திலும் தொடரும் மயிலிட்டி காணி உரிமைப் போராட்டம்.

“எங்கள் மயிலிட்டி காணிகளை விடுவிக்க இன்னும் நாம் எத்தனை வாரங்கள் போராட வேண்டும்? எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும்? அரச உயர் அதிகாரிகளே, அரசே பதில் சொல்!” என்ற உருக்கமான கோஷங்களுடன், மயிலிட்டி காணி இழந்த மக்கள் தமது காணி உரிமைக்கான போராட்டத்தை இன்று 20ஆவது வாரமாகவும் தொடர்ந்துள்ளனர்.

மயிலிட்டி காணிக்கை மாதா தேவாலயத்துக்கு முன்பாக இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில், தமது பூர்வீக நிலங்களை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மக்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

பல வருடங்களாகத் தமது சொந்த மண்ணுக்குத் திரும்ப முடியாமல் காத்திருக்கும் தங்களின் நிலை குறித்து மனம் தளர்ந்த நிலையில் கருத்துத் தெரிவித்த மக்கள், அரசு மாறினாலும் தங்களது வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை என்றும் கவலை தெரிவித்தனர்.

தேர்தல் காலங்களில் வழங்கப்படும் வாக்குறுிகளைத் தாண்டி, காணிகளை நடைமுறையில் விடுவிப்பதற்கான நடவடிக்கையே தமக்குத் தேவை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தங்களது பிள்ளைகள் தங்கள் சொந்தக் காணியில் வாழ வேண்டும் என்பதற்காகவும், முன்னோர்கள் வாழ்ந்த நிலத்தில் மீண்டும் வாழ்ந்து மடிய வேண்டும் என்பதற்காகவுமே இந்த 20ஆவது வாரப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்றும் மக்கள் உருக்கமாகத் தெரிவித்தனர்.

தமது காணிகள் தொடர்பில் அரச உயர் அதிகாரிகளும், அரசும் தெளிவான பதிலை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்திய மக்கள், போராட்டம் எத்தனை வாரங்கள் தொடர வேண்டும் என்பதைத் தாங்கள் தீர்மானிக்கவில்லை என்றும், காணிகளை எப்போது விடுவிக்கின்றார்கள் என்பதுதான் அதனைத் தீர்மானிக்கும் என்றும் மேலும் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.