அறியாமையால் செய்த தவறுக்காக மரணதண்டனை வழங்குவது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறல்.

அறியாமையில் அல்லது தவறுதலாகச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டமைக்காக மரணதண்டனை வழங்குவது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் விவகாரம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சவூதிச் சட்டத்தில் அத்தகைய ஏற்பாடுகள் காணப்படலாம் என்றாலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் ஒரு வெளிநாட்டுப் பிரஜை (இலங்கைப் பிரஜை) என்பதால், சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் ஏற்பாடுகள் குறித்தும் சவூதி அரசு அவதானம் செலுத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

வெளியாகியுள்ள தகவல்களுக்கு அமைய இந்த மரணதண்டனை நிறைவேற்றப்பட்டால், அது சர்வதேசத்தின் மத்தியில் தவறானதொரு முன்னுதாரணமாகிவிடும்.

மத நிந்தனை என்பது நியாயப்படுத்தக் கூடியதோ அல்லது அங்கீகரிக்கப்படக் கூடியதோ அல்ல. எனினும், இந்த விவகாரம் முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் அணுகப்பட வேண்டும்.

எனவே, இந்த விவகாரத்தில் இலங்கை அரசு நேரடியாக இராஜதந்திர ரீதியில் துரிதமாகத் தலையிட வேண்டும்.

ஜனாதிபதி அல்லது வெளிவிவகார அமைச்சர் மட்டத்தில் இந்த விடயம் அணுகப்பட வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.