ஒரு வார்த்தைக்காக ஓர் உயிரைப் பறிக்காதீர்! – அனோஜனுக்குக் கருணை காட்டுமாறு சவூதியிடம் சஜித் உருக்கமான கோரிக்கை.

சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் விவகாரத்தில், சவூதி அதிகாரிகள் கருணை காட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு வார்த்தைக்காக ஒருவரின் உயிர் எடுக்கப்படக் கூடாது எனவும், அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளைச் சவூதி அதிகாரிகள் திறந்த வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கும் ஒரு மதம் “கருதப்படும் அவமானம் ஒன்றினால் குறைந்து போய்விடாது” எனக் குறிப்பிட்ட அவர், அதன் பலமானது ஒரு வார்த்தைக்காக உயிரைப் பறிப்பதில் தங்கியிருக்கக் கூடாது என்றார்.

மேலும், ஒவ்வொரு மாபெரும் மதத்தின் மையத்திலும் உள்ள கருணையைச் சவூதி அரேபியா வெளிப்படுத்தும் எனத் தான் நம்புவதாகவும் சஜித் பிரேமதாஸ தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சவூதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கைப் புலம்பெயர் தொழிலாளரான சிவராசா அனோஜனுக்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்பட்டதாகக் கூறப்படும் மரணதண்டனைத் தகவல்களைத் தொடர்ந்தே எதிர்க்கட்சித் தலைவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.