நுவரெலியாவில் இரு பிள்ளைகளின் தாய் வெட்டிப் படுகொலை! – இளைஞர் ஒருவர் கைது.

நுவரெலியா மாவட்டம், பூண்டுலோயா பழைய சீன் தோட்டத்தில் லயன் குடியிருப்பு ஒன்றில் குடும்பப் பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

பெண்ணின் சடலத்தை மீட்ட பூண்டுலோயா பொலிஸார், பெண்ணைக் கொலைசெய்த சந்தேகத்தில் இளைஞர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.

பழைய சீன் தோட்டத்தில் வசித்த 47 வயதான பெருமாள் மாலா எனும் இரு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறே கொலைக்கான காரணமாக இருக்கலாம் எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் அதே தோட்டத்தில் வசிக்கும் 27 வயதான இளைஞரே கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் சடலம் வீட்டின் சமயலறையில் இருந்து மீட்கப்பட்டது எனத் தெரிவித்த பொலிஸார், சடலம் மீட்கப்படும்போது துணிகளால் சுற்றப்பட்டிருந்தது எனவும் தெரிவித்தனர்.

சடலம் நாவலப்பிட்டி நீதவானின் மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பூண்டுலோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.