600 ஊழியர்களை வேலையை விட்டு நீக்க ஓயோ முடிவு – 250 பேரை புதிதாக சேர்ப்பதாக தகவல்

இந்தியாவில் முன்னணி ஆன்லைன் தங்கும் விடுதி புக்கிங் நிறுவனமான ஓயோ விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓவாக திகழ்பவர் ரிதேஷ் அகர்வால். சுமார் 3,700 பேர் இந்த நிறுவனத்தில் பணியாற்றும் நிலையில், தனது ஊழியர்களின் எண்ணிக்கையை 10 சதவீதம் குறைக்க ஓயோ திட்டமிட்டுள்ளது.

அதாவது அந்நிறுவனத்தின் ப்ராடக்ட், இன்ஜினியரிங் பிரிவுகளில் வேலை செய்யும் 600 ஊழியர்களை வேலையில் இருந்து வெளியேற்றி, ரிலேஷன்சிப் மேனேஜ்மென்ட் மற்றும் பிஸ்னஸ் டெவலப்மென்ட் பிரிவுகளில் 250 பேரை புதிதாக பணிக்கு சேர்க்க ஓயோ திட்டமிட்டுள்ளது. எனவே, தற்போதைய ஊழியர்கள் எண்ணிக்கையில் 350 பேரை குறைக்க ஓயோ திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே எதிர்கால வளர்ச்சி சார்ந்த தேவைகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்நிறுவனத்தின் சிஇஓ ரிதேஷ் அகர்வால் விளக்கமளித்துள்ளார். மேலும், வெளியேறும் ஊழியர்களுக்கு உரிய முறையில் செட்டில்மென்ட் வழங்கப்பட்டு வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு ஓயோ துணை நிற்கும் எனக் கூறியுள்ளார். ஏற்கனவே, 2020ஆம் ஆண்டில் சுமார் 300 ஊழியர்களை ஓயோ நிறுவனம் பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது.

உலகம் முழுவதுமே Recession எனப்படும் பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் மெல்ல உணரப்பட்டு வருகிறது.கோவிட் பெருந்தொற்று, ரஷ்யா – உக்ரைன் போர் ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியானது சங்கிலி விளைவாக பெரும்பாலான சர்வதேச நாடுகளை பொருளாதார நெருக்கடியில் தள்ளியுள்ளது.

இதன் நீட்சியாக கடந்த சில மாதங்களாகவே முன்னணி பெருநிறுவனங்கள் பணிக்கு ஆட்கள் எடுப்பதை குறைத்துக்கொண்டுள்ளன. அத்துடன் உலகின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், ட்விட்டர் உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய நிறுவனங்கள் கணிசமான எண்ணிக்கையில் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன.இந்தியாவிலும் சோமோட்டோ, பைஜூஸ், விப்ரோ போன்ற நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டன. தற்போது அந்த வரிசையில் ஓயோவும் இணைந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.