பல்கலை மாணவி காதலனாலேயே கழுத்தறுத்துக் கொலை! – காரணம் என்ன? (Photos)

கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மூன்றாம் வருட மாணவி, நேற்று நண்பகல் கொழும்பு – 7, குதிரைப் பந்தயத் திடலின் அருகே அவரது காதலனால் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டார்.

ஹோமாகம – கிரிவந்துடுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதான சத்துரி ஹன்சிகா மல்லிகாரச்சி எனும் யுவதியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்.

குதிரைப் பந்தயத் திடலின் பின் பக்கமாக, கால்பந்தாட்ட சம்மேள கட்டடத்தை நோக்கியதாக உள்ள பகுதியில் வைத்து யுவதியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது என்று பொலிஸார் கூறினர்.

சடலத்தின் அருகே கையடக்கத் தொலைபேசி ஒன்றும், பை ஒன்றும் காணப்பட்ட நிலையில் சம்பவம் குறித்து கறுவாத்தோட்டம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இந்நிலையில் நேற்று மாலையாகும் போது, குறித்த யுவதியைக் கொலை செய்தார் எனச் சந்தேகிக்கப்படும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வெல்லம்பிட்டி – கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய மாணவனையே கறுவாத்தோட்டம் பொலிஸார் கைது செய்தனர்.

கொலையை அடுத்து, அப்பகுதியில் உள்ள சி.சி.ரி.வி. உள்ளிட்ட அறிவியல் தடயங்களை வைத்து முன்னெடுத்த விசாரணைகளில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.

சி.சி.ரி.வி. காணொளி பரிசோதனையின் போது சந்தேகநபர் கொழும்பு பல்கலைக்கழக மாணவன் என்பதை பல்கலைக்கழககத்தின் மற்றொரு மாணவன் அடையாளம் காட்டினார்.

இதையடுத்து உடனடியாகச் செயற்பட்ட இரு பொலிஸ் குழுக்கள், குறித்த மாணவனைத் தேடி அவரது வீடு அமைந்துள்ள கொலன்னாவைப் பகுதிக்கும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் அம்மாணவன் தங்கியிருந்த பகுதிக்கும் சென்றன.

இதன்போது பல்கலைக்கழகத்திலிருந்து, குறித்த சந்தேகநபரான மாணவன் எழுதியதாக நம்பப்படும் சில கடிதங்களும், மன நோய்களுக்கு வழங்கப்படும் சில மருந்துகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.

இதேவேளை, மாணவனின் வீட்டுக்குச் சென்ற பொலிஸாருக்கு, அங்கு அவர் சிக்காத போதும், கொலை செய்யும் போது அவர் அணிந்திருந்தார் எனக் கூறப்படும் ஆடைகள், கொலைக்குப் பயன்படுத்தியதாக நம்பப்படும் இரத்தம் தோய்ந்த கத்தி, அவரது கையடக்கத் தொலைபேசி, பணப் பை என்பன அங்கிருந்து கிடைத்தன.

இந்நிலையில் அப்பொருட்களை வீட்டில் வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்ளும் நோக்கோடு வீட்டை விட்டு அவர் வெளியேறியிருந்ததாக கூறப்படும் சந்தேகநபரை பொலிஸார் இடைநடுவே கைது செய்தனர்.

சந்தேகநபரும், கொலையுண்ட யுவதியும் காதலித்து வந்தனர் எனக் கூறப்படும் நிலையில் காதல் தகராறு கொலைக்குக் காரணமாக இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எனினும், கொலைக்கான பிரதான காரணம் குறித்து இதுவரை தெரியவரவில்லை.

கொலையுண்ட யுவதி குதிரைப் பந்தயத் திடல் அருகே, காதலனுடன் பேசுவதற்காக வந்துள்ள போது இந்த விபரீத சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று கூறப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்டம் பொலிஸார் முன்னெடுக்கின்றனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.