16 ஆண்டுகள் தலைமறைவு; பிரான்சில் பீட்சா கடை நடத்திய மாபியா கும்பல் தலைவன்…!

இத்தாலி நாட்டில் கொலை, போதைப்பொருள், ஆட்கடத்தல், சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலின் தலைவன் எட்ஹர்டொ கிரிகொ (வயது 63). இத்தாலியின் மிகப்பெரிய மாபியா கும்பலான டிரன்ங்ஹிடா என்ற கும்பலின் தலைவர்களில் ஒருவராக எதர்டொ செயல்பட்டு வந்துள்ளார். இவர் மீது கொலை உள்ளிட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக, மாபியா கும்பல் மோதலின் போது எதிர்தரப்பை சேர்ந்த 2 பேரை அடித்து கொலை செய்து உடலை ஆசிட் ஊற்றி சிதைத்ததாக கிரிகொ மீது குற்றச்சாட்டு உள்ளது. அந்த 2 பேரின் உடல்கள் இதுவரை கிடைக்கவில்லை. இதனிடையே, 2006-ம் ஆண்டு கிரிகொ மீது இத்தாலி கோர்ட்டு கைது வாரண்ட் பிறப்பித்தது.

கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க மாபியா தலைவன் கிரிகொ தலைமறைவானார். இண்டர்போல் உதவியுடன் கிரிகொவை இத்தாலி போலீசார், உளவுத்துறையினர் தலைமறைவான மாபியா கும்பல் தலைவன் கிரிகொவை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இத்தாலி போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கிரிகொ பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார். இண்டர்போல் உதவியுடன் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளார்.

கொலை வழக்கில் 2006-ல் இத்தாலியில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தலைமறைவான கிரிகொ பிரான்ஸ் நாட்டில் நுழைந்துள்ளார். அங்கு தனது பெயரை பொலோ டிமிட்ரியோ என்று மாற்றியுள்ளார். பின்னர், பிரான்சின் பல்வேறு நகரங்களில் உள்ள ஓட்டல்களில் பீட்சா செய்யும் சமையல்காரராக வேலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து பிரான்சின் செயிண்ட்-இடினி நகரில் மற்றொரு நபருடன் சேர்ந்து சொந்தமாக பீட்சா கடை தொடங்கியுள்ளார். தனது உணவகத்தை பிரபலபடுத்த உள்ளூர் டிவிக்கு பேட்டி அளித்துள்ளார்.

மேலும், செய்தித்தாள்களில் விளம்பரமும் கொடுத்துள்ளார். தன்னை அனைவரும் மறந்திருப்பார்கள் என்று எண்ணிய கிரிகொ டிவி பேட்டியின்போது தான் இத்தாலியை பூர்வீகமாக கொண்டவன் என கூறியுள்ளார். மேலும், இத்தாலியை சேர்ந்த மற்றொரு குற்றவாளியின் பெயரையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.

இது தொடர்பான தகவல்கள் இண்டர்போல் வசம் சென்றுள்ளன. இதனை தொடர்ந்து பிரான்ஸ், இத்தாலி போலீசாருடன் இணைந்து இண்டர்போல் நடத்திய விசாரணையில் 16 ஆண்டுகளுக்கு முன் இத்தாலியில் தலைமறைவான மாபியா தலைவன் கிரிகொ தான் சொந்தமாக பீட்சா கடை நடத்தி வருவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இத்தாலி மாபியா கும்பல் தலைவன் கிரிகொவை பிரான்சில் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கிரிகொ விரைவில் இத்தாலிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.