மக்களை மிதித்து நசுக்கி வருகின்ற ராஜபக்ச நிழல் அரசை விரட்ட அணிதிரள்வோம்! – சஜித் அறைகூவல்.

“மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்குப் பதிலாக இந்த மக்கள் விரோத ராஜபக்ச நிழல் அரசு மக்களை மிதித்து நசுக்குவதைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டினார்.

கொழும்பு, குணசிங்கபுர பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மனிதாபிமானம் தெரியாத, மனிதநேயமற்ற மக்களின் வலியையும் வேதனைகளையும் புரிந்து கொள்ளாத உயர் வர்க்க ஆட்சியே தற்போது நாட்டில் செயற்படுகின்றது.

வரியை அதிகரித்து, வட்டி விகிதத்தையும் அதிகரிக்கும் இந்த அரசிடம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை என்றாலும் தற்போதைய ஜனாதிபதியை நியமித்த 134 பேரின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகள் அவர்களிடம் இருக்கின்றன.

மொட்டு ஆதரவான ராஜபக்சக்களை பாதுகாப்பதே இந்த அரசினதும் ஜனாதிபதியினதும் நோக்கமாக இருப்பதால், இந்த அடக்குமுறை அரசை விரட்ட மக்கள் அணிதிரள வேண்டும்.

அரசிடம் இல்லாத மக்கள் பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தியிடம் பதில் இருக்கின்றது. இது தொடர்பில் எந்த விவாதமும் இல்லை.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.