அமெரிக்கர்கள் உடனே ரஷியாவிலிருந்து வெளியேற வேண்டும்.

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் 2-ம் ஆண்டாக தொடர்கிறது. ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எடுத்துள்ளன.

போரை நிறுத்த கோரும் அந்நாடுகள், மறுபுறம் உக்ரைனுக்கு ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கி போரை ஊக்கப்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டை ரஷியா முன்வைத்துள்ளது.

இதற்கிடையே, போர்ச்சூழலை பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையைச் சேர்ந்த ஈவான் கெர்ஷ்கோவிச் என்ற நிருபரை ரஷியா கைது செய்துள்ளது. இதுபற்றி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது. நிருபரின் உயிர்பாதுகாப்பு பற்றி கவலை தெரிவித்து உள்ளது.

ரஷியாவின் மத்திய பாதுகாப்பு துறை எனப்படும் எப்.எஸ்.பி. என்ற உளவு அமைப்பு வெளியிட்ட செய்தியில், யெகாடரீன்பர்க் மாகாணத்தில், உரால் மலைப்பிரதேச பகுதியில் வைத்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை நிருபர் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்க தரப்பு உத்தரவின்படி ஈவான் செயல்பட்டு, ரஷிய ராணுவத்தின் தொழில் வளாகத்தில் உள்ள நிறுவனங்களில் ஒன்றின் செயல்பாடுகள் பற்றி ரகசிய தகவல்களை சேகரித்துள்ளார் என தெரிவித்துள்ளது. இந்த தகவலை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இதனை அல்-ஜசீரா செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது. உக்ரைனுக்கு எதிராக போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக அமெரிக்க செய்தி நிறுவன பத்திரிகையாளர் ஒருவர் ரஷியாவில் வைத்து உளவு குற்றச்சாட்டுக்கான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அல்-ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், அமெரிக்கர்கள் உடனே ரஷியாவிலிருந்து வெளியேற வேண்டும் என அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ரஷியாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். ரஷிய பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.