இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ‘டுவென்டி-20’ போட்டியில் பட்லர் அரைசதம் கடந்து கைகொடுக்க இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2வது ‘டுவென்டி-20’ சவுத்தாம்ப்டனில் நடந்தது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்டிங்’ செய்த ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் (0), அலெக்ஸ் கேரி (2), ஸ்டீவ் ஸ்மித் (10) ஏமாற்றினர். கேப்டன் ஆரோன் பின்ச் (40), மார்கஸ் ஸ்டாய்னிஸ் (35), மேக்ஸ்வெல் (25), ஆஷ்டன் ஏகார் (23) கைகொடுத்தனர்.

ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. கமின்ஸ் (13), ஸ்டார்க் (2) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் ஜோர்டான் 2 விக்கெட் வீழ்த்தினார்.

பட்லர் விளாசல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் (9) ஏமாற்றினார். டேவிட் மாலன் (42) நம்பிக்கை தந்தார். அபாரமாக ஆடிய ஜாஸ் பட்லர் அரைசதம் கடந்தார். டாம் பான்டன் (2), கேப்டன் மோர்கன் (7) நிலைக்கவில்லை. சாம்பா பந்தை சிக்சருக்கு அனுப்பிய பட்லர் வெற்றியை உறுதி செய்தார்.

இங்கிலாந்து அணி 18.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பட்லர் (77), மொயீன் அலி (13) அவுட்டாகாமல் இருந்தனர். இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 2-0 எனக் கைப்பற்றியது

Leave A Reply

Your email address will not be published.