கலாஷேத்ரா பாலியல் புகார்- பேராசிரியர் ஹரி பத்மன் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம்.

மத்திய அரசின் கலாசாரத்துறையின் கீழ் சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து மத்திய, மாநில மகளிர் ஆணையம் சார்பில் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள், பேராசிரியர் ஹரி பத்மன், உதவியாளர்கள் சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகிய 4 பேர் மீது பரபரப்பு புகார்களை சொன்னார்கள். இதனை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை ஏற்று மாணவிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி ஒருவர் அடையார் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பேராசிரியர் ஹரி பத்மன் மீது பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், ஹரி பத்மன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், உல்லாசத்துக்கு வீட்டுக்கு அழைத்ததாகவும், அவரது தொல்லை தாங்காமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டதாகவும் கூறியிருந்தார்.

இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி, கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 3 கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். மாதவரத்தில் உள்ள நண்பரின் வீட்டில் பதுங்கி இருந்த ஹரி பத்மன் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர் ஹரி பத்மன் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

4 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக மாணவிகளிடம் கல்லூரி நிர்வாகம் வாய்மொழியாக தகவல் தெரிவித்துள்ளது. இதைதொடர்ந்து மாணவிகளின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.