இன்னொரு போருக்குத் தயாராகும் சம்பந்தன், விக்கி, கஜேந்திரகுமார்! பதிலடி கொடுக்க தயார் : சரத் வீரசேகர

இன்னொரு போருக்குத் தயாராகும் சம்பந்தன், விக்கி, கஜேந்திரகுமார்!
– பதிலடி கொடுக்க ராஜபக்ச படையும்
தயார் என சரத் வீரசேகர சண்டித்தனம்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்மபலம் ஆகியோர் இன்னமும் பிரிவினைவாதக் கொள்கையில் உள்ளனர். அவர்கள் இன்னொரு போருக்குத் தயாராக உள்ளனர். அவர்களுக்கு அவர்களின் பாணியில் தக்க பதிலடி கொடுக்க ராஜபக்ச படைகளாகிய நாமும் தயாராகவே உள்ளோம்.”

– இவ்வாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

“தமிழர்களின் தேவை சுயநிர்ணய ஆட்சி என்றால் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு வெளியில் வாழும் தமிழர்கள் குறித்து தமிழ் அரசியல் தலைவர்களின் நிலைப்பாடு என்ன?

சிங்களப் பகுதிகளில் உள்ள தமிழர்களை வெளியேற்ற வேண்டும் என்றா கூற வருகின்றனர்? சம்பந்தன், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் போன்றவர்கள் இதனையா எதிர்பார்கின்றனர்? முதலில் இந்தக் கேள்விக்கு அவர்கள் பதில் தெரிவிக்க வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் ஆகியோர் இன்னமும் பிரிவினைவாதக் கொள்கையில் உள்ளனர். அவர்கள் இன்னொரு போருக்குத் தயாராக உள்ளனர். எனவே, ராஜபக்ச படைகளாகிய நாமும் போருக்குத் தயாராகவே உள்ளோம். அவர்களுக்கு அவர்களின் பாணியில் தக்க பதிலடியை வழங்க எந்நேரமும் நாம் தயாராகவே இருக்கின்றோம்.

மக்கள் பிரதிநிதிகள் என்ற திமிருடன் இம்மூவரும் செயற்படுகின்றார்கள். அவர்கள் திருந்த வேண்டும். இல்லையேல் நாமே அவர்களைத் திருத்த வேண்டி வரும். அது எந்த வழியில் என்பது அவர்களின் செயற்பாடுகளில்தான் தங்கியுள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.