13ஐ முழுமையாக்கக் கட்சிகள் யாழில் கூடி வலியுறுத்தும்! – இன்று தீர்மானம் எடுக்கப்படும்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் அவசரமாகச் சந்தித்துப் பேசவுள்ளன. 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி இந்தக் கட்சிகள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும் என்று தெரிகின்றது.

13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து இலங்கை ஆட்சியாளர்களும் பேசி வருகின்ற நிலையில் அதனை முழுமையாக அமுல்ப்படுத்துமாறு இந்தியாவும் அழுத்தம் கொடுத்து வருகின்றது.

இந்தநிலையில் அதனை அமுல்ப்படுத்துவது தொடர்பில் தமிழ்க் கட்சிகளிடையே ஒருமித்த நிலைப்பாடு இல்லை என்பதாக அரச தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்ழைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. ஒற்றையாட்சியின் கீழான 13ஆவது திருத்தததை முழுமையாக நிராகரிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ச்சியாகக் கூறிவருகின்றது.

இதற்கமைய தமிழர் பரப்பிலுள்ள பல்வேறு தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்ந்து ஒருமித்து தீர்மானம் எடுக்கும் முகமாக இன்று யாழ்ப்பாணத்தில் விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகத் தெரியவருகின்றது.

இந்தக் கூட்டத்தில் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்துமாறு இலங்கை ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தி விசேட தீர்மானமொன்று எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.