ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப்-ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்.

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும், ‘பி’ பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாடும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் இந்த 20 ஓவர் திருவிழாவில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்று இருப்பதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்து விட்டது. டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை முழுமையாக இழந்து விட்டன. எஞ்சிய 3 இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் இமாசலபிரதேசத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைந்தால் தான் அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும். ராஜஸ்தானுக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் 5 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்று இருப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். இதேபோல் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி கடந்த லீக் ஆட்டத்தில் 112 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் சரண் அடைந்தது.

172 ரன் இலக்கை நோக்கி ஆடிய அந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 10.3 ஓவர்களில் 59 ரன்னில் சுருண்டது. அந்த தோல்வி ராஜஸ்தான் அணியின் அடுத்த சுற்று முன்னேற்றத்திலும் சறுக்கலாக அமைந்தது. இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி கண்டாலும், அடுத்த அணிகளின் முடிவுகள் அனுகூலமாக அமைந்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைக்க இயலும். அதேநேரத்தில் அந்த அணியின் ரன்-ரேட் பஞ்சாப்பை விட நன்றாக இருக்கிறது.

முதலாவது லீக் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க ராஜஸ்தான் அணியும், தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அடுத்த சுற்று கனவில் தொடர பஞ்சாப் அணியும் தங்களது முழு பலத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.எல். தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 14-ல் ராஜஸ்தானும், 11-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்று இருக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.