அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 110 ஆவது ஜனன தின நிகழ்வு!

“மலையகத்தின் தந்தை” எனப் போற்றப்படுகின்ற பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 110 ஆவது ஜனன தினம் இன்று தலைநகர் கொழும்பிலும், மலையகப் பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் உட்பட கட்சி பிரமுகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவும் இதன்போது கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினார்.

இந்தா நிகழ்வின் பின்னர் இ.தொ.காவின் தலைமையகமான சௌமியபவனின் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

அத்துடன், நுவரெலியா – கொட்டகலையில் உள்ள சி.எல்.எப். வளாகம் உட்பட ஏனைய பகுதிகளிலும் ஜனன தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

சுதந்திர இலங்கையில் உருவான முதலாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினராக அங்கம் வகித்தவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான். இலங்கை – இந்திய காங்கிரஸ் உருவாக்கத்துக்கு முக்கிய பங்களிப்பு வழங்கிய அவர் அதன் தலைவராகவும் செயற்பட்டார். இலங்கை – இந்திய காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாக பெயர் மாற்றம் பெற்றது முதல் அதன் தலைவராக அவர் செயற்பட்டார். முக்கிய பல அமைச்சுக்களை அவர் வகித்தார்.

Leave A Reply

Your email address will not be published.