ஆசிய கோப்பை: பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.

பதினாறாவது ஆசியக் கோப்பைத் தொடர் இன்று துவங்கியது. முதல் போட்டியில் பாகிஸ்தான் முல்தான் மைதானத்தில் நேபாள் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்று முடிந்து இருக்கிறது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற பாகிஸ்தான அணி முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. அனுபவம் குறைவான நேபாள் அணியை இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பு பயிற்சியாக வைத்துக் கொள்ள பாகிஸ்தான் முடிவு செய்தது.

ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஃபக்கார் ஜமான் 14, இமாம் உல் ஹக் 5 என சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இதற்கு அடுத்து வந்த முகமது ரிஸ்வான் 44, ஆகா சல்மான் 5 என அவர்களும் வெளியேறினார்கள்.

பாகிஸ்தான் அணி 124 ரன்கள் இழந்திருந்த பொழுது கேப்டன் பாபர் அசாமுடன் இப்திகார் அகமது ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஆரம்பத்தில் பொறுமை காட்டி பின்பு அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட்டு மளமளவென்று ஸ்கோர் குவித்தது.

இந்த இருவரும் சேர்ந்து பாகிஸ்தான் ஐந்தாவது விக்கட்டுக்கு அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என 214 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்கள். இறுதிக்கட்டத்தில் 131 பந்துகளில் 14 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 151 ரன்கள் எடுத்த பாபர் அசாம் வெளியேறினார்.

பாபர் அசாம் உடன் நின்று துணையாக விளையாடிய இப்திகார் அகமது அதிரடியாக விளையாடிய 67 பந்துகளில் சதம் அடித்தார். இது அவருக்கு முதல் சதம் ஆகும். இறுதி வரை ஆட்டம் இழக்காத அவர் 71 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 109 ரன்கள் குவித்தார். கடைசிப் பந்தில் சதாப் கான் நான்கு ரன்களில் ஆட்டம் இழந்தார். 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் எடுத்தது.

அடுத்து மிகப்பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய கத்துக்குட்டி அணியான நேபாள் அணிக்கு ஆரிப் ஷேக் 26, சோமல் கமி 28 ரன்கள் எடுத்தார்கள். மற்ற யாரும் குறிப்பிடும்படியான ரன்கள் எடுக்கவில்லை. முடிவில் 23.4 ஓவர்களில் நேபாளனி 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பாகிஸ்தான அணி தனது முதல் ஆட்டத்தில் 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது. பாகிஸ்தான் தரப்பில் சதாப்கான் நான்கு விக்கெட் வீழ்த்தினார். ஷாகின் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுப் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். ஏறக்குறைய இந்த வெற்றியின் மூலமாகவே பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விட்டது என்று கூறலாம். அடுத்து பாகிஸ்தான அணி செப்டம்பர் 2ஆம் தேதி முதல் சுற்றின் கடைசி மற்றும் இரண்டாவது போட்டியில் இந்திய அணிக்கு எதிராக மோதுகிறது.

Leave A Reply

Your email address will not be published.