யாழ். மாவட்ட செயலகம் முன்பாக கடற்றொழிலாளர்கள் போராட்டம்!

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளத்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால் இன்று காலை 10. 30 மணியளவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தின் நிறைவில் கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு யாழ். மாவட்ட செயலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 154 கடற்றொழில் புரியும் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்தக் குடும்பத்தினர் யாழ். மாவட்ட கடல் பகுதியில் தமது அன்றாட வாழ்வாதாரத்தை மேற்கொள்கின்றனர்.

இந்தக் கடலை நம்பியே தமது குடும்ப வாழ்வை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய வருகையால் சொல்லொண்ணாத் துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

கடந்த காலங்களில், இலங்கை – இந்திய மீனவர்கள் பல்வேறு கட்டப் பேச்சுகளை பல்வேறு இடங்களில் மேற்கொண்டனர். இறுதியல் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ள.

இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன. இவை தொடர்பாக எதுவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

எனவே, இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய அடாவடித்தனமான தொழில் முறையை உடனடியாக நிறுத்தி எமது நாட்டின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து எமது கடல் வளங்களை அழித்தும், சூறையாடியும், எமது மீனவர்களின் தொழில் உபகரணங்களை அழித்துச் செல்வதையும் உடனடியாக தடுத்து நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த இழுவை மடித் தொழிலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் நாம் தொடர் போராட்டங்களை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளோம் என்பதையும் தங்களுக்குத் தயவுடன் அறியத் தருகின்றோம்.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.