ரணிலுடன் கைகோர்க்கச் சஜித்துக்கு ஹரின் இறுதி அழைப்பு! – போட்டியிட்டால் தோல்வியடைவீர் என்றும் எச்சரிக்கை.

“பதவி ஆசையில் அலைந்து திரியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என்று வெட்கம் இல்லாமல் பகிரங்கமாகக் கூறியுள்ளார். இந்தப் பதவி ஆசையை மறந்துவிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கைகோர்த்துச் செயற்படுமாறு அவருக்கு நான் இறுதி அழைப்பு விடுவதுடன் இறுதி எச்சரிக்கையையும் விடுகின்றேன்.”

இவ்வாறு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

“சுயநல அரசியல்வாதியான சஜித் பிரேமதாஸ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் மீண்டும் படுதோல்வியைச் சந்திப்பார். அத்துடன் அவரின் அரசியலும் முடிவுக்கு வரும்” – என்றும் அமைச்சர் ஹரின் சுட்டிக்காட்டினார்.

“சஜித்துக்குப் பதவி ஆசை தீர வேண்டுமெனில் ரணிலுடன் இணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்க முடியும்” – என்றும் ஹரின் அறிவுரை கூறினார்.

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் வெற்றி வரலாற்று வெற்றியாகப் பதிவு செய்யப்படும்” – என்றும் அவர் அடித்துக் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.