ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ‘சனல் – 4’ காணொளி பற்றி சர்வதேச மட்ட விசாரணை!

“உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பான சனல் – 4 காணொளி தொடர்பில் சர்வதேச மட்டத்தில் விசாரணைகளை மேற்கொள்ள அவதானம் செலுத்தியுள்ளோம்.”

இவ்வாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

“கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள் எனப் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்திருந்தார். அதேபோல் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவத்தைக் கண்ணீருடன் குறிப்பிட்ட ஒரு தரப்பினர் கோட்டபய ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்துக்கு உடந்தையாக இருந்தார்கள்” – என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி,

“ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான சனல் – 4 காணொளி மற்றும் அதன் உள்ளடக்கம் பாரதூரமானது. நாட்டு மக்களைக் கொன்று இரத்தத்தின் ஊடாக ஒரு தரப்பினர் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தால் அது குறித்து முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த விடயம் தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன?” – என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார,

“ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான சனல் – 4 காணொளி தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தினோம்.

இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளோம்.

அத்துடன் தேவையாயின் சர்வதேச மட்டத்தில் விசாரணைகளை மேற்கொள்ளவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதில் அரசு ஒருபோதும் பின்வாங்காது.

ஜெனிவாக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில்தான் இவ்வாறான காணொளிகள் வெளியாகுகின்றன.

கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் வெற்றிக்காகக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

அவ்வாறாயின் அதிகாலையில் சென்று கோட்டபய ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள் எனப் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அப்போது வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மறுபுறம் ஒரு தரப்பினர் அழுதுகொண்டு ஒரு தரப்புக்குச் சார்பாகச் செயற்பட்டார்கள். ஆகவே, இவர்கள் அனைவரும் கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்துக்கு உடந்தையாகச் செயற்பட்டவர்களாகக் கருத வேண்டும்.” – என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.