ரூ.2,000 நோட்டுகளை மாற்ற இன்று கடைசி நாள்

ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கான காலஅவகாசம் சனிக்கிழமையுடன் (செப்.30) நிறைவடைகிறது.

செலாவணி மேலாண்மை நடவடிக்கையின்கீழ், ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி கடந்த மே மாதம் 19-ஆம் தேதி அறிவித்தது.

இந்த நோட்டுகளை வங்கிக் கிளைகளில் மாற்றி, வேறு மதிப்புடைய நோட்டுகளாக பெற்றுக் கொள்ளலாம் அல்லது வங்கிக் கணக்குகளில் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. இவ்வாறு மாற்றுவது அல்லது வங்கிக் கணக்குகளில் செலுத்துவதற்கு செப்டம்பா் 30-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

அவகாசம் நிறைவடையும் நிலையில், அது நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

முன்னதாக, இந்திய ரிசா்வ் வங்கி கடந்த 1-ஆம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாட்டில் புழக்கத்தில் ரூ.2,000 நோட்டுகளில் 93 சதவீதம் வங்கிகள் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

‘நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 நோட்டுகளில், ரூ.3.32 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. அதாவது 93 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பியுள்ளன. இதில் 87 சதவீத நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. எஞ்சிய 13 சதவீத நோட்டுகள் வங்கிகளில் மாற்றப்பட்டு, ரூ.100, ரூ.500 போன்ற வேறு மதிப்பு நோட்டுகளாக பெற்றுச் செல்லப்பட்டுள்ளன’ என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.