திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீட்டில் சிக்கிய வெளிநாட்டு கரன்சி, நகைகள்

திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் அடையாறு இல்லத்தில் நேற்று 11 மணி நேரம் விசாரணை மேற்கொண்ட வருமான வரித்துறையினர், அவரது வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்கள் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை கைப்பற்றினர்.

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்பி-யுமான ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய கல்வி நிலையங்கள், மருத்துவமனை உட்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 5 நாட்களாக சோதனையில் ஈடுபட்டனர். வரி ஏய்ப்பு புகாரில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. ஐந்தாவது நாளாக நேற்றும் பல்வேறு இடங்களில் சோதனை தொடர்ந்தது.

குறிப்பாக, சென்னை அடையாறில் கஸ்தூரிபாய் நகரில் உள்ள ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அதன் அருகில் உள்ள பாரத் பல்கலைக்கழக அலுவலகத்திலும் தீவிர சோதனை நடைபெற்றது. அப்போது, அடையாறு வீட்டிற்கு வந்த வருமான வரித்துறை புலனாய்வு ஆணையர் சுனில் மாத்தூர், ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மருமகன் நாராயணசாமி இளமாறன், மகள் ஸ்ரீனிசா ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்.

சிக்கிய முக்கிய ஆவணங்கள்:

சுமார் 11 மணி நேரத்திற்கு மேலாக நடந்த சோதனையின் போது, வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள், சொத்து பத்திரங்கள், வெளிநாட்டு கரன்சிகள், நகைகள் உட்பட பல முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். சோதனையில் 4.5 கோடி ரூபாய் பணம் 2.7 கிலோ மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஜெகத்ரட்சகன் நடத்தி வந்த அறக்கட்டளையின் வரி விலக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்ததாக உள்ள புகாரை எடுத்து சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்.

பின்னர், அவற்றை மிகப் பெரிய டிரங் பெட்டியில் வைத்து எடுத்துச் சென்றனர்.கடந்த 5 நாட்களாக ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனை, தற்போது முடிவு பெற்றதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.