‘கூகுள்’ சி.இ.ஓ சுந்தர் பிச்சையுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

இந்தியாவில் எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி சூழலை விரிவுபடுத்துவது குறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் மோடி உடன் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது, ஹெச்பி உடன் இணைந்து இந்தியாவில் குரோம்புக் அசெம்பிள் செய்யும் பணியில் கூகுள் ஈடுபட்டு வருவதற்காக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

இந்திய மொழிகளில் செயற்கை நுண்ணறிவு கருவிகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை ஊக்குவித்த பிரதமர் மோடி, சிறந்த நிர்வாகத்திற்கான செயற்கை நுண்ணறிவு கருவிகளை உருவாக்குவதற்காக பணியாற்றும்படி கூகுள் நிறுவனத்தை கேட்டுக் கொண்டார்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் கூகுளின் உலகளாவிய ஃபின்டெக் செயல்பாட்டு மையத்தை நிறுவும் திட்டத்தையும் பிரதமர் மோடி வரவேற்றார். மேலும், வரும் டிசம்பர் மாதம் டெல்லியில் இந்தியா நடத்தும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த உச்சி மாநாட்டில் முக்கிய அங்கம் வகிக்கும் வகையில் கூகுளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

அதேநேரத்தில் கூகுள்பே மூலம் யுபிஐ சார்ந்து இந்தியாவில் நிதிச் சேர்க்கையை வலுப்படுத்துவது தொடர்பாக கூகுள் வைத்துள்ள திட்டம் குறித்து சுந்தர் பிச்சை, பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.