அமைச்சரவை மாற்றத்தை விமர்சிக்க ‘மொட்டு’க்கு எந்த உரிமையும் இல்லை! – மனுஷ நாணயக்கார பதிலடி.

அமைச்சரவை மாற்றத்தை விமர்சிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

அமைச்சரவை மாற்றத்தை அரசின் பிரதான பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தில் தவறான முடிவை எடுத்துள்ளார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. நேற்று தெரிவித்திருந்தார். சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து கெஹலிய ரம்புக்வெலவை மாற்றியது முற்றிலும் தவறான விடயம் என்றும அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இது தொடர்பில் அரசின் பங்காளிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் அமைச்சருமான மனுஷ நாணயக்கார கருத்துத் தெரிவிக்கையில்,

“அமைச்சரவையின் தலைவர் ஜனாதிபதியே. எனவே, அமைச்சர்களை நீக்குவதற்கும், அமைச்சர்களை மாற்றுவதற்கும், புதியவர்களை நியமிப்பதற்கும் ஜனாதிபதிக்கு முழு அதிகாரம் உண்டு. அதற்கமைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். அவசியம் கருதி இந்த மாற்றத்தை அவர் செய்துள்ளார். இதனை விமர்சிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எந்த உரிமையும் கிடையாது. மொட்டுக் கட்சி மாத்திரம் இந்த அரசின் பங்காளிக் கட்சி அல்ல. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எனப் பல கட்சிகள் இந்த அரசின் பங்காளிக் கட்சிகளாக உள்ளன.

இந்த அரசின் தலைவரும் அமைச்சரவையின் தலைவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே. ஜனாதிபதியின் அதிகாரத்தை எவரும் கேள்விக்குட்படுத்த முடியாது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளருக்கு இதை விட வேறு விளக்கத்தை என்னால் வழங்க முடியாது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.