இரண்டு கோடி இருபது லட்சம் மக்களுக்கும் நட்டஈடு தர ராஜபக்‌ஷக்களிடம் நிதி உள்ளது – நாடாளுமன்றத்தில் சுமந்திரன் தெரிவிப்பு.

“நீதிமன்றம் நட்டஈட்டை வழங்குமாறு உத்தரவிட்டால் இரண்டு கோடி இருபது லட்சம் மக்களுக்கும் நட்டஈட்டை வழங்குவதற்கான பணம் ராஜபக்‌ஷக்களிடம் உள்ளது.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று வரவு – செலவுத் திட்டத்தில் இரண்டாம் வாசிப்பின் மீது நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதனைக் குறிப்பிட்ட அவர், இந்தப் பணத்தை மீட்கும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

நாட்டுக்கு வெளியே ராஜபக்‌ஷ சகோதரர்கள் சேர்த்துவைத்துள்ள பணத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“வெளிநாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள பணம் அனைத்தையும் நாட்டுக்குள் கொண்டுவர முடியும். அந்தப் பணத்தை வைத்து நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பலாம். முன்னாள் ஜனாதிபதியும் அவரது சகோதாரர்களும் அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர்களும் பொது நிதியைக் கொள்ளைடியத்தன் காரணமாகவே நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குப்பட்டது. அவர்கள் நட்டஈட்டைச் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்க வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.