இளைஞர் உயிரிழந்த விவகாரம்: யாழ். சிறைக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய நீதிவான்!

வட்டுக்கோட்டை இளைஞர் படுகொலை தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் சிறைச்சாலைக்கு நேரில் சென்று வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டார்.

அதேவேளை, உயிரிழந்த இளைஞருடன் கைது செய்யப்பட்ட மற்றைய இளைஞரிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை மன்றில் முன்னிலையாகுமாறு அந்த இளைஞருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞர் பொலிஸாரின் சித்தரவதை காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

இளைஞரின் உயிரிழப்பு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இடம்பெற்றமையால் இளைஞரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள் யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்று வருகின்றன.

இளைஞரின் உடற்கூற்று பரிசோதனைகள் நேற்றுமுன்தினம் மதியம் யாழ்.போதனா வைத்தியசாலையில்சட்ட வைத்திய அதிகாரி உ.மயூரதன் மேற்கொண்டபோது நீதிவான் வைத்தியசாலைக்கு நேரில் சென்று சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

தொடர்ந்து சிறைச்சாலைக்கும் அவர் நேரில் சென்று சிறைச்சாலை அத்தியட்சகர், உத்தியோகஸ்தர்கள் , உள்ளிட்டவர்களிடம் வாக்குமூலங்களையும் பெற்றுக்கொண்டார்.

உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி வி.திருக்குமரன், சட்டத்தரணி ரிஷிகேஷவன், மற்றும் சட்டத்தரணி மயூரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உயிரிழந்த இளைஞருடன் கைதான மற்றைய இளைஞர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்றால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

உயிரிழந்த இளைஞர் மற்றும் அவரது நண்பரான மற்றைய இளைஞர் ஆகியோர் மீது நகைத் திருட்டு குற்றச்சாட்டு சுமத்தி வட்டுக்கோட்டை பொலிஸாரினால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தியபோது இருவரையும் மன்று விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து இருவரும் யாழ்ப்பாணம் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலே அலெக்ஸ் எனும் இளைஞர் உயிரிழந்தார். மற்றைய இளைஞர் தொடர்ந்து சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலே நேற்று நீதிமன்றம் அவரைப் பிணையில் செல்ல அனுமதித்தது.

Leave A Reply

Your email address will not be published.