திருப்பதி லட்டு பிடிக்க ஆட்கள் தேவை.. சாதி சர்ச்சையை கிளப்பிய திருப்பதி தேவஸ்தானத்தின் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிடிக்க ஆட்கள் தேவை என வெளியிடப்பட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் லட்டு பிடிக்க வைஷ்ணவ பிராமணர்கள் மட்டும் தேவை என குறிப்பிடப்பட்டுள்ளதுதான் இந்த சர்ச்சைக்கு காரணம்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. திருப்பதி லட்டுக்கு என்று தனி சுவை, மணம் உண்டு. திருப்பதி தேவஸ்தானம் ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் லட்டுக்களை தயாரிப்பதாக கூறப்படுகிறது.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஊழியர்களை வழங்கும் ஸ்ரீ லட்சுமி ஸ்ரீனிவாசா மேன் பவர் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், லட்டு தயாரிக்க வைஷ்ண பிராமணர்கள் மட்டுமே ஆகம விதிப்படி விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், விண்ணப்பதாரர்கள் ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

திருமலை பிரசாதம் தயாரிப்பதில் சாதிப் பாகுபாடு காட்டப்படுவது நியாயமில்லை என இடதுசாரித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.