இந்திய மீனவர்கள் 14 பேருக்கும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 14 பேரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம், காரைநகர் கடற்பகுதியில் வைத்து இழுவைப் படகுடன் 14 இந்திய மீனவர்கள் (17) மாலை கைது செய்யப்பட்டனர்.

கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து (18) நீரியல் வளத் திணைக்களத்துக்குக் கொண்டு வரப்பட்டனர். அதன்பின்னர் அவர்கள் (18) மாலை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் பதில் நீதிவான் சரோஜினிதேவி இளங்கோவனின் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அவரின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், கைதான இந்திய மீனவர்கள் அனைவரையும் எதிர்வரும் 28 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

இதில் இரு மீனவர்கள், கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இந்த இரு மீனவர்களையும் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டார்.

விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஏனைய 12 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.