இந்த ஆட்சியில் அரசியல் தீர்வு இல்லை! புதிய நாடாளுமன்றத்திலேயே அது சாத்தியம்!! – சம்பந்தனுக்கு ரணில் பதில்.

“அடுத்த புதிய நாடாளுமன்றம் தெரிவாகி ஒரு வருடத்துக்குள் புதிய அரசமைப்பை உருவாக்கி அதனூடாகவே தீர்வைக் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.”

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அதேவேளை, இந்த நாடாளுமன்றத்தில், அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் பறிக்கப்பட்ட அதிகாரங்களில் சில அதிகாரங்களை மீண்டும் வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனூடாக மாகாண சபைகளைப் பலப்படுத்துவது குறித்தும் ஆராய்கின்றோம் என்றும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (21) மாலை நடைபெற்றது. இதன்போது, இந்திய – இலங்கை ஒப்பந்தம், வடக்கு – கிழக்கு மீளிணைப்பு, அதிகாரப் பகிர்வு, அரசியல் தீர்வு தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. விலாவரியாக எடுத்துரைத்தார். அதற்குப் பதிலளிக்கும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார் என்று மேற்படி சந்திப்பில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.