65 போர்க்கைதிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.

மாஸ்கோ: உக்ரேனிய எல்லையை ஒட்டி, ரஷ்ய ராணுவ விமானம் ஒன்று புதன்கிழமை (ஜனவரி 24) விபத்துக்குள்ளானது.

அவ்விமானத்தில் உக்ரேனிய போர்க்கைதிகள் 65 பேர் இருந்ததாக ரஷ்யத் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

உக்ரேனிடம் ஒப்படைப்பதற்காக அவர்களை அவ்விமானத்தில் ஏற்றிச் சென்றதாகக் கூறப்பட்டது.

அதில் விமானப் பணியாளர்கள் அறுவரும் வேறு மூவரும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. விபத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

ரஷ்யப் பாதுகாப்புப் படையினரின் ‘டெலிகிராம்’ சமூக ஊடகப் பக்கமான ‘பாஸா’வில் வெளியிடப்பட்டுள்ள ஒரு காணொளியில், ஒரு விமானம் தரையை நோக்கிப் பாய்வதும் தரையில் விழுந்ததும் அது வெடித்துச் சிதறுவதும் தெரிவதாக ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி கூறியது.

இல்யுஷின் II-76 என்ற அந்த ராணுவ விமானம், வீரர்கள், சரக்கு, ராணுவக் கருவிகள் மற்றும் ஆயுதங்களை ஏற்றிச் செல்வதற்காக வடிவமைத்து உருவாக்கப்பட்டது.

இதனிடையே, ரஷ்ய நகரமான பெல்கோரோடிற்கு வடகிழக்கே அமைந்துள்ள கோரோச்சன்ஸ்கி மாவட்டத்தில் ஒரு ‘சம்பவம்’ நிகழ்ந்துவிட்டதாகவும் தான் அவ்விடத்திற்குச் சென்றுகொண்டிருப்பதாகவும் அவ்வட்டார ஆளுநர் வியாசெஸ்லவ் கிளாட்கோவ் தெரிவித்தார்.

புலனாய்வாளர்களும் அவசரகால உதவிப் பணியாளர்களும் அவ்விடத்திற்கு ஏற்கெனவே சென்றுவிட்டதாகவும் அவர் கூறினார்.

பின்னர், “கோரோச்சன்ஸ்கி மாவட்டத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகிவிட்டது. அதிலிருந்த அனைவரும் உயிரிழந்துவிட்டனர்,” என்று ‘டெலிகிராம்’ வாயிலாக அவர் தெரிவித்ததாக ‘பிபிசி’ செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரேனிய எல்லையை ஒட்டி அமைந்துள்ள பெல்கோரோட் பகுதியில், அண்மைய மாதங்களாக உக்ரேன் அடிக்கடி தாக்குதல் நடத்தி வந்துள்ளது. 2023 டிசம்பரில் அங்கு நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.