“மயிலத்தமடு எங்கே இருக்கின்றது?” – இப்படிக் கேட்டார் நீதி அமைச்சர்.

மட்டக்களப்பு, மயிலத்தமடுவில் சிங்களப் பேரினவாத அடக்குமுறைக்கு எதிராகப் பண்ணையாளர்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், “மயிலத்தமடு எங்கே இருக்கின்றது?” என்று வியப்புடன் கேட்டுள்ளார் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ.

மயிலத்தமடுவில் இடம்பெறும் மிருகவதை, காணி ஆக்கிரமிப்பு, சிங்கள – பௌத்த பேரினவாத அடக்குமுறைகள் தொடர்பிலும், குருந்தூர்மலை விவகாரம் தொடர்பிலும், நாட்டிலிருந்து நீதிபதி ஒருவர் வெளியேறிச் செல்லுமளவுக்கு அதிகரித்துள்ள அடக்குமுறைகள் தொடர்பிலும் நீதி அமைச்சர் விஜயதாஸவிடம் வினவப்பட்டது. இதையடுத்தே “மயிலத்தடு எங்கே இருக்கின்றது?” என்றவாறாகக் கேட்டுள்ளார் நீதி அமைச்சர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“குருந்தூர்மலை தொடர்பான விடயங்களை அறிந்தே வைத்திருக்கின்றேன். உண்மையில் சில அரசியல்வாதிகள்தான் இந்த விடயத்தை பதற்றமான நிலைக்குள் இட்டுச் செல்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாகச் செயற்பட்ட ரி.சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறிச் சென்றமைக்கு அரச அழுத்தங்கள் காரணமல்ல. அந்தத் தகவல்கள் பொய்யானவை. உண்மையில் தனது குடும்பத்திலுள்ள பிரச்சினையால்தான் அவர் நாட்டைவிட்டு வெளியேறிச் சென்றார். இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு அனைத்துத் தகவல்களும் சேகரிக்கப்பட்ட பின்னரேயே தெரியப்படுத்துகின்றேன்.

அவருக்கு அச்சுறுத்தல் என்றால், அந்த அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு அவருக்கு அதிகாரம் இருந்தது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் தன்னைத் தற்காத்துக் கொண்டிருக்கலாம். அல்லாதுவிடில் இந்த விடயத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பலவற்றை முன்னெடுத்திருக்கலாம். அதையெல்லாம் விடுத்து அவர் அச்சுறுத்தலால்தான் நாட்டைவிட்டு வெளியேறினார் என்று தெரிவிப்பது பொருத்தமும் இல்லை – அதில் உண்மையும் இல்லை.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.