இலங்கை இந்தியாவின் பிராந்தியமா? – ஹரினின் கருத்துக்கு சு.க. கடும் கண்டனம்.

“இலங்கையானது இந்தியாவின் பிராந்தியம் அல்ல. அவ்வாறு பிராந்தியம் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கருத்து வெளியிட்டிருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதனை வன்மையாகக் கண்டிக்கின்றது.”

இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரான துஷ்மந்த மித்ரபால தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“அமைச்சர் (ஹரின் பெர்ணான்டோ) எந்த நோக்கில் அந்தக் கருத்தை வெளியிட்டார் எனத் தெரியவில்லை. அது பற்றி நான் முழுமையாக ஆராயவில்லை. எனினும், இலங்கை என்பது இந்தியாவின் பிராந்தியம் கிடையாது.

அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்திய விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கும் கட்சி அல்ல. பொருளாதாரம் சார்ந்த விடயங்களின்போது ஒத்துழைத்துச் செயற்படலாம்.” – என்றார்.

அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராகத் தொடுத்துள்ள வழக்கை தயாசிறி ஜயசேகர நீக்கிக்கொண்டால் அவர் சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியில் இணையலாம் என்றும், அதற்குத் தடை இல்லை என்றும் துஷ்மந்த மித்ரபால மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.