வெடுக்குநாறிமலை ஆலயத்தின் பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் விளக்கமறியல்!

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகா சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றபோது சப்பாத்துக் கால்களுடன் ஆலயத்துக்குள் நுழைந்த பொலிஸார், ஆலயப் பூசகர் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்து தடுத்து வைத்திருந்தனர்.

மேற்படி 8 பேரையும் வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் நெடுங்கேணி பொலிஸார் நேற்று மாலை முன்னிலைப்படுத்தினர். இதன்போது ஆலயப் பூசகர் உள்ளிட்ட 8 பேர் சார்பாக சட்டத்தரணிகளான க.சுகாஸ், தி.திருஅருள், அ.திலீப்குமார் உள்ளிட்ட குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இது தொடர்பில் சட்டத்தரணி தி.திருஅருள் கருத்துத் தெரிவிக்கையில்,

“வெடுக்குநாறிமலை ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். குறித்த வழக்கு தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதால் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளமை தொடபில் மன்றுக்குத் தெரிவித்தமையால் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்காகவும் திகதியிடப்பட்டது.” – என்றார்.

குறித்த வழக்கு விசாரணை இடம்பெற்றபோது நீதிமன்றம் முன்பாக வேலன் சுவாமிகள், ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.