இல்ல மெய்வல்லுநர் போட்டியில் கார்த்திகைப் பூ அலங்காரம்: உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமையவே பாடசாலை மாணவர்களை அழைத்து விசாரித்தோம்.

பொலிஸ் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமையவே பாடசாலை மாணவர்களைப் பொலிஸ் நிலையம் அழைத்து விசாரணைகளை முன்னெடுத்தோம் என்று தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி இல்ல மெய்வல்லுநர் போட்டியில் கார்த்திகைப் பூ அலங்காரம் செய்யப்பட்டமை தொடர்பில், மாணவர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தமை தொடர்பில் ஆசிரியர் சங்கத்தினரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸாரின் வாக்குமூலத்தைப் பெறுவதற்காகத் தெல்லிப்பழை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியைக் கடந்த வெள்ளிக்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுத்திருந்தது.

அதன் பிரகாரம் முன்னிலையான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், பொறுப்பதிகாரி விடுமுறையில் உள்ளார் என்று கூறி சம்பவம் தொடர்பான வாக்குமூலம் வழங்கினார். அதன்போது தமக்குப் பொலிஸ் உயர் அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தலின் பிரகாரமே மாணவர்களைப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை செய்தோம் என்று தெரிவித்தார்.

வாக்குமூலங்களைப் பதிவு செய்த மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர், அதன் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்.

Leave A Reply

Your email address will not be published.