நாட்டை அழித்த ராஜபக்ஷக்களுடன் எந்த டீலும் இல்லாத ஒரே கட்சி நாமே – சஜித் இப்படிப் பெருமிதம்.

“இக்கட்டான காலத்தில் நாட்டைப் பொறுப்பேற்று, நாட்டைச் சரியான பாதையில் திருப்பியதாகச் சிலர் கூறுகின்றனர். ஆனால், அவ்வாறு கூறுபவர்களே நாட்டை நாசமாக்கி, நாட்டையே வங்குரோத்தாக்கிய நாசகார குடும்ப ஆட்சியின் துணையுடன் என்றுமே அடைய முடியாத நாற்காலியில் ஏறி, நாட்டை அழித்த திருடர்களைப் பாதுகாத்து வருகின்றனர். ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய மக்கள் கூட்டணிக்குமே இந்நாட்டை நாசமாக்கிய ராஜபக்ஷக்களுடன் எந்த டீலும் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் புத்திஜீவிகள் ஒன்றியத்தினர், ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குழாத்தினர் எடுத்த நடவடிக்கையால் நாட்டை அழித்தது யார் என்பதை இன்றளவில் உயர் நீதிமன்றத்தின் மூலம் வெளிக்கொணர்நதுள்ளனர். எனவே, பொய்யான கோப்புக் கட்டுகளை எடுத்துக்கொண்டு திருடர்களைப் பிடிப்பதற்கு அதிகாரம் கேட்க வேண்டிய அவசியமில்லை.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் அரண் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் பொலனறுவையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ராஜபக்ஷ குடும்பத்தை வெல்ல வைக்க நாம் ஒருபோதும் வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்கவில்லை. நாட்டை அழித்த ராஜபக்ஷ குடும்பத்திற்காக மேடைகளில் ஏறி உரைகளை நிகழ்த்தவில்லை. ராஜபக்ஷக்களை ஆட்சிக்கு கொண்டு வந்து நாட்டை அழித்த வாய்ச் சொல் தலைவர்கள் தான் இன்று இவ்வாறு 76 வருட வரலாறு குறித்து பேசுகின்றனர்.

விவசாய அமைச்சர்களாகவும், மீன்பிடி அமைச்சர்களாகவும், கலாசார அமைச்சர்களாகவும் செயற்பட்டு, ராஜபக்ஷக்களின் கைக்கூலிகளாக நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியமைக்கு இவர்களும் துணைபோனார்கள்.

நாட்டில் நிலவும் மஜர அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, எம்மிடமுள்ள குறைபாடுகளைக் களைந்து, உகந்த, உன்னத, தூய்மையான ஆட்சியை நோக்கி நாம் செல்வோம்.

வரலாறு நெடுகிலும் பல்வேறு அரசுகளின் கீழ், ஜனாதிபதிகள் ஆட்சிக்கு வந்ததன் பின்னரே நாட்டுக்காகப் பணிகளைச் செய்துள்ளார்கள். ஐக்கிய மக்கள் சக்தியும் நானும் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே இந்தப் பணிகளை முன்னெடுத்துள்ளோம். எனவே, ஏனையவர்கள் வழங்கும் வாக்குறுதிகளை நம்ப முடியாவிட்டாலும், தாம் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டிருப்பதால், அவற்றை நம்பலாம்.

எமது ஆட்சியில் ஜனாதிபதி செயலகத்தின் பணிகளை மக்கள் நலன் கருதி மாவட்ட செயலங்கள் ஊடாக வினைத்திறனாக முன்னெடுக்க நடவடிக்கை எடுப்போம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.