ஓரே போட்டியில் இரண்டு சூப்பர் ஓவர், பஞ்சாப் அசத்தல் வெற்றி.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் டிரா ஆனது. இதனால், வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 36-வது ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

நாணய வென்ற மும்பை அணியின் கப்டன் ரோகித் சர்மா துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இதன்படி களமிறங்கிய மும்பை அணியின் சார்பில் ரோகித் சர்மா மற்றும் டி கொக் ஆகியோர்  துவக்க ஆட்டக்காரர்களாக  களமிறங்கினர், இந்த ஜோடியில் ரோகித் சர்மா 9(8) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் (0) ஓட்டம் ஏதும் எடுக்காமலும், இஷான் கிஷான் 7(7) ரன்களும், அடுத்து களமிறங்கி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்ணால் பாண்ட்யா 34(30) ரன்களும் எடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 8(4) ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடி தனது அரைசதத்தை பதிவு செய்த டி கொக் 53(43) ரன்களில் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் அதிரடி காட்டிய பொல்லார்டு 34(12) ரன்களும், கெளல்டர் நைல் 24(12) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது சமி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும் கே.எல் ராகுலும் களம் இறங்கினர். மயங்க் அகர்வால் 11 ரன்களில் வெளியேறி  ஏமாற்றம் அளித்தார். 3-ஆம் விக்கெட்டிற்கு களம் இறங்கிய அதிரடி மன்னன் கெய்ல் (21 பந்துகளில் 24 ரன்கள்) அதிர்ச்சி அளித்தார். எனினும்  கே.எல் ராகுல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் மறுமுனையில் விக்கெட்டுகள்  விழுந்த வண்ணம் இருந்தன. நிகோலஸ் பூரான் (12 பந்துகளில் 24 ரன்கள் ) எடுத்து ஆட்டமிழந்தார். மேக்ஸ்வேல்(0) வழக்கம் போல் வந்தவேகத்தில் நடையை கட்டினார்.

51 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் உள்பட 77 ரன்கள் சேர்த்த கே.எல் ராகுல், பும்ரா பந்தில் போல்டு ஆகி ஆட்டம் இழந்தார். இதையடுத்து ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 8 ரன்கள் மட்டுமே  பஞ்சாப் அணி எடுத்தது. இதனால், ஆட்டம் டிரா ஆனது.

இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி  பும்ராவின் துல்லிய பந்து வீச்சால் ரன்களை சேர்க்க முடியாமல் திணறியது.  2 விக்கெட்டுகளை இழந்து வெறும் 5 ரன்களை மட்டுமே பஞ்சாப் அணி சூப்பர் ஓவரில் சேர்த்தது. இதையடுத்து, 6 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் சூப்பர் ஓவரில் பேட் செய்த மும்பை அணியும் தடுமாறியது. ரோகித் சர்மா கொக் கூட்டணி 6 ரன்களை எடுக்க முடியால் 5 ரன்களை மட்டுமே சூப்பர் ஓவரில் சேர்த்தது. இதனால், மீண்டும் ஆட்டம் சமநிலை ஆனது.

இதையடுத்து, வெற்றியை தீர்மானிக்க 2-வது முறையாக சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. ஏற்கனவே முதல் சூப்பர் ஓவரில் பேட் செய்த வீரர்களையும் பந்து வீசியவர்களையும் பயன்படுத்தக் கூடாது என்பது விதி என்பதால், இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணியில் பொல்லார்டும்  பாண்ட்யாவும் களம் இறங்கினர்.

மும்பை அணி சூப்பர் ஓவரில் 11 ரன்களை சேர்த்தது. இதையடுத்து, 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.  மும்பை அணி சார்பில் பவுல்ட் சூப்பர் ஓவரை வீசினார். பஞ்சாப் அணியில் கிறிஸ் கெயிலும் மயங்க் அகர்வாலும் களம் இறங்கினர்.  முதல் பந்தை எதிர்கொண்ட  கிறிஸ் கெயில் சிக்சருக்கு விளாசினார்.  2-வது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 3 வது மற்றும் 4 பந்தில் பவுண்டரியை விளாசிய மயங்க் அகர்வால் பஞ்சாப் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார்.

Leave A Reply

Your email address will not be published.