தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் கட்சிகளை இணைத்துக்கொண்டு ஆட்சி அமைப்போம் ‘சங்கு’ கூட்டணியின் எம்.பி. அடைக்கலநாதன் தெரிவிப்பு.

“உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வைத்துப் பார்க்கின்றபோது வடக்கு, கிழக்கில் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நாங்கள் கூறியது போல் தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் கட்சிகளை இணைத்துக் கொண்டு நாங்கள் ஆட்சி அமைப்போம்.” – என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை மதியம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் வடக்கு, கிழக்கில் எமக்கு ஆணை தந்துள்ளனர். எதிர்வரும் காலங்களில் அனைவரும் ஒற்றுமையாகச் செயற்படவில்லை என்றால் மக்கள் வழங்கிய ஆணையை மாற்றியமைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்ற செய்தியைச் சொல்லியுள்ளனர்.
நாங்கள் ஒற்றுமையாக இல்லாத நிலையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பி. அரசுக்குக் கூடுதலாக மக்களின் ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளமை அனைவரும் அறிந்த விடயம். எனினும், இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் ஜே.வி.பி. பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.
தமிழர்களைத் தமிழர்கள் ஆழக்கூடிய வகையில் தமது ஆணையைத் தமிழ் மக்கள் வழங்கியுள்ளனர். மேலும் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒற்றுமையாகப் பயணிக்க வேண்டும் என்கின்ற செய்தியையும் சொல்லி இருக்கின்றார்கள்.
எம்மைப் பொறுத்த வகையில் அடுத்தடுத்து வருகின்ற தேர்தலாக இருக்கலாம், போராட்டங்களாக இருக்கலாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற அடிப்படையில் செயற்படக்கூடிய ஒரு முயற்சியை நாம் முன்னெடுக்கின்றோம்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை வைத்துப் பார்க்கின்றபோது வடக்கு, கிழக்கில் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே நாங்கள் கூறியது போல் தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் கட்சிகளை இணைத்துக்கொண்டு நாங்கள் ஆட்சி அமைப்போம். நாங்கள் தமிழரசுக் கட்சியுடனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அணியுடனும் பேசிக்கொண்டு இருக்கின்றோம்.
எதிர்வரும் காலங்களில் நாங்கள் ஒற்றுமையாக ஒரே அணியாகச் செயற்படுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவோம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் என்பதற்காக மக்கள் வாக்குகளை வழங்கியுள்ளனர். மக்களின் ஆணையை உணர்ந்தவர்களாக நாங்கள் செயற்பட வேண்டும்.” – என்றார்.