உங்கள் தந்தை எத்தனை பேரை வேட்டையாடினார்? வாய் கொடுத்து வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டாம் – நாமல் எம்.பிக்கு பிரதி அமைச்சர் ஜயசிங்ஹ நெத்தியடி.

“உங்கள் தந்தை எத்தனை பேரை வேட்டையாடினார்? உங்களை எதிர்ப்பவர்களை இருக்கவிட்டீர்களா? ஆகவே, எம்மிடம் வாய் கொடுத்து வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டாம்.”

இவ்வாறு தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ, நாமல் ராஜபக்ஷ எம்.பியை எச்சரித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேலையாட்களின் வரவு – செலவுத் திட்ட நிவாரணப்படி திருத்தச் சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதனத் திருத்தச் சட்டமூலம் ஆகியவற்றின் மீதான விவாதத்தில் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ உரையாற்றிக்கொண்டிருந்தபோது இராதாகிருஷ்ணன் எம்.பி ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பினார். ஆனால், அதனைப் பெரிதாகச் செவிமடுக்காத தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ, “எதிராளிகளாக இருந்த சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ஷ, தயாசிறி ஜயசேகர நீங்கள் எல்லோரும் கொழும்பு மாநகர சபை ஆட்சியைக் கைப்பற்ற ஒன்றிணைந்தீர்கள். ஊடக சந்திப்புகளை நடத்தினீர்கள். எதிர்கால நண்பர்களானீர்கள்.” – என்றார்.

இதன்போது குறுக்கிட்ட நாமல் ராஜபக்ஷ எம்.பி., “ஏன் நீங்களும் எமது நண்பர்தானே.” – என்றார்.

இதனால் கோபமடைந்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ, “நீங்கள் நல்லவர்களா? தாஜுதீனைக் கொலை செய்தீர்கள். படுகொலையாளிகளை, வெள்ளை வான் கடத்தல்காரர்களைப் பாதுகாத்தீர்கள். உங்கள் தந்தை எத்தனை பேரை வேட்டையாடினார். சரத் பொன்சேகாவை என்ன செய்தீர்கள்? உங்களை எதிர்ப்பவர்களை இருக்கவிட்டீர்களா? ஆகவே, எம்மிடம் வாய் கொடுத்து வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டாம்.” – என்று பதிலடி வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.