செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் வள்ளிபுனத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம், இடைக்கட்டுப் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் தலைமைத்துவப் பயிற்சிக்காக வருகை தந்திருந்த மாணவச் செல்வங்கள் மீது ஸ்ரீலங்கா விமானப் படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகளினதும் 7 பணியாளர்களினதும் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வள்ளிபுனம் – இடைக்கட்டுச் சந்தியில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

தாயக மற்றும் புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் தாய் தமிழ் பேரவையின் ஆதரவோடு சமூகச் செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளர் வே.கரிகாலன், தாய் தமிழ் பேரவையின் ஸ்தாபகர் ச.ரூபன், அரசியல் பிரமுகர்கள், கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் , நலன்விரும்பிகள், செஞ்சோலையில் உயிரிழந்த பிள்ளைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.