மதுபோதையில் அட்டகாசம் புரிந்த மருமகனை பொல்லால் தாக்கிக் கொலை செய்த மாமனார்!
மாமனாரால் பொல்லால் தாக்கப்பட்டு மருமகன் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் காலி, கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்கஹவத்த பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
மொரகொட பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய மருமகனே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சம்பவ தினத்தன்று கொலை செய்யப்பட்ட மருமகன் தனது வீட்டில் நண்பர்களுடன் இணைந்து மதுபானம் அருந்தியுள்ள நிலையில் மதுபோதையில் உள்ள நண்பர்களை அவர்களது வீடுகளுக்குக் கொண்டு சென்று விடுவதற்காக மாமனாரிடம் ஓட்டோவைக் கேட்டுள்ளார். ஆனால், மாமனார் தனது ஓட்டோவைக் கொடுக்க மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த மருமகன் பொல்லால் வீட்டின் கதவை அடித்து உடைத்து மனைவியைத் தாக்க முயன்றுள்ளார்.
அதைத் தடுப்பதற்காக மாமனார் தனது மருமகனைப் பொல்லால் தாக்கியுள்ளார்.
காயமடைந்த மருமகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபரான 58 வயதுடைய மாமனார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரந்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
