ம.பி.யில் ‘கார்பைட் கன்’ பட்டாசால் பயங்கரம்: 14 சிறுவர்கள் பார்வை இழப்பு; 6 பேர் கைது!

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் பட்டாசு வெடித்த 14 சிறுவர்களின் பார்வை பறிபோயுள்ளது.

அது என்ன பட்டாசு?
மத்தியப்பிரதேசத்தில், மூன்று நாட்களில், பட்டாசொன்றை வெடித்த 122க்கும் அதிகமான சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

கண்களில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் 14 பேருக்கு பார்வை பறிபோய்விட்டது.

அந்த பிள்ளைகள் பயன்படுத்திய பட்டாசு, ’carbide gun’ அல்லது ‘desi firecracker gun’ என்னும் பட்டாசு ஆகும். அதை வாங்கியே ஆகவேண்டுமென பிள்ளைகள் அடம்பிடித்து வாங்கியிருக்கிறார்கள்.


ஆனால், அது தடை செய்யப்பட்ட ஒரு பட்டாசு ஆகும். 150 முதல் 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட அந்த பட்டாசு, பார்க்க பொம்மை போல் இருந்தாலும், குண்டு போல வெடித்துள்ளது.

சில பிள்ளைகள் அந்த பட்டாசை வாங்கி வெடிப்பதைக் கண்ட மற்ற பிள்ளைகள், தாங்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியமாலே வீட்டிலேயே வெடிகுண்டு போன்ற அந்த பட்டாசை தயாரிக்க முயன்றுள்ளார்கள்.

அப்போது அந்த பட்டாசு வெடித்ததில் சிலரது கண்பார்வை பறிபோயுள்ளது.

அந்த பட்டாசை சட்டவிரோதமாக விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த பட்டாசை தயாரிப்பவர்களும் விற்பவர்களும் சட்டபடி அதற்கான விளைவுகளை சந்திப்பார்கள் என பொலிஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.