வாய்ப் பேச்சு வேண்டாம்; செய்து காட்ட வேண்டும்! – அரசிடம் மனோ எம்.பி. வலியுறுத்து.
மலையக மக்களுக்கான முகவரி என்பது அஞ்சல் சார்ந்தது மாத்திரம் அல்ல அது அரசியல் ரீதியானது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
மலையக மக்கள் தேசிய நீரோட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட மக்களாக உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனியார் வானொலி ஒன்றின் நேர்காணலிலேயே அவர் இதனைக் கூறினார்.
ஒரு சில காத்திரமான உண்மைகளுடன் மலையக மக்கள் அஞ்சல் விடயங்களில் எதிர்நோக்கும் சவால்களை அவர் எடுத்துரைத்தார். .
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் நெடுஞ்சாலைகளில் இருந்து ஒரு கிலோமீற்றருக்குள் மக்களுக்கு காணி வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் மனோ கணேசன் தெரிவித்தார்.
மீண்டும் மீண்டும் மலைப் பாங்கான உயரமான பகுதிகளில் காணிகளை வழங்கினால் அஞ்சல்காரர் கூட அவர்களை அணுக முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசைச் சேர்ந்த மலையக மக்கள் பிரதிநிதிகள் பேச்சளவில் மாத்திரம் இருக்காமல் அதனைச் செயற்படுத்துமாறும் அவர் வலியுறுத்தினார்.
