ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகத் தயார்! – ரணில் அதிரடி அறிவிப்பு.
“ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது விருப்பம். எனவே, இரு தரப்பு இணைவுக்கு நான்தான் தடையாக உள்ளேன் எனில், எந்தச் சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகத் தயார்.” – என்று ஐ.தே.கவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறினார் என்று சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
“ரணில் விக்கிரமசிங்க பதவி விலகி, தலைமைப் பதவியை சஜித்தோ அல்லது வேறு எவரிடமோ கையளிக்க வேண்டும் எனச் செயற்குழு தீர்மானித்தால் அதற்கேற்ப செயற்படத் தயார்.
இந்நாட்டில் அரசியலில் வகிக்கக் கூடிய உயர் பதவிகளை வகித்தவிட்டேன். எனவே, எனக்கு விட்டுக்கொடுப்பு என்பது பெரிய விடயம் அல்ல.” – என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார் என்று அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
