பெற்றோருக்கு பயந்து நாய் கடித்ததை மறைத்த சிறுவன்: ரேபிஸ் நோய் தாக்கி 15 வயது மாணவன் பரிதாப பலி!

தெரு நாய் கடித்ததால் 15 வயது சிறுவன் ரேபிஸ் நோயால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரேபிஸ் நோயால் மாணவன் உயிரிழப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சின்னிவாக்கம் கிராம பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் சபரிவாசன்(15).

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, வீட்டின் வெளியே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது வெறி நாய் ஒன்று அவரைக் கடித்தது.

பெற்றோர் திட்டுவார்கள் என பயந்து நாய் கடித்ததை வீட்டில் சொல்லாமல் அச்சிறுவன் மறைத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு சபரிவாசனின் நடத்தை மாறியதை கவனித்த பெற்றோர், அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதித்த போது, ரேபிஸ் நோய் தீவிரமடைந்தது தெரியவந்ததை தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும், பின்னர் சென்னை அரசு மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

தொடர்ந்து, மருத்துவ கண்காணிப்பில் இருந்த சிறுவன் சபரிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெற்றோருக்கு பயந்து நாய் கடித்ததை சொல்லாததால், உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.