இலங்கையில் ஒரே நாளில் 788 பேர் போதைப்பொருள்களுடன் சிக்கினர்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ் நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 788 பேர் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 16 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 805 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 7 பேர் புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பிவைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து, 252 கிராம் ஹெரோயின், 347 கிராம் ஐஸ், 582 கிலோகிராம் 751 கிராம் கஞ்சா, 50 கஞ்சா செடிகள், 140 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 25 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 1,701 போதை மாத்திரைகள், 134 கிராம் 600 மில்லிகிராம் மதனமோதகம் மற்றும் 3 கிலோகிராம் 288 கிராம் மாவா போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.