கணக்காய்வாளர் நாயகம் நியமனம் சரியான பாதைக்கான முக்கிய நகர்வு – முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய பாராட்டு.
தேசிய கணக்காய்வாளர் திணைக்களத்துக்குள் இருந்தே கணக்காய்வாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதானது சரியான பாதையில் பயணிப்பதை முன்னிறுத்தி அரசமைப்புப் பேரவையினால் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய நகர்வாகும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கடந்த வாரம் நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் கூடிய அரசமைப்புப் பேரவை, தேசிய கணக்காய்வாளர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமான சமுதிகா ஜெயரத்னவை தலைமை கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு ஏகமனதாக அனுமதி வழங்கியதை அடுத்து, அவர் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் இந்நியமனம் குறித்தும், அரசமைப்புப் பேரவையின் உறுப்பினர்களாக சிவில் சமூகத்தின் சார்பில் புதிதாக மூவர் நியமிக்கப்பட்டிருப்பது குறித்தும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்துள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“மிகக் காத்திரமான தற்போதைய சூழ்நிலையில் அரசமைப்புப் பேரவையின் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு எமது வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கின்றோம். அதேவேளை தேசிய கணக்காய்வாளர் திணைக்களத்துக்குள் இருந்தே கணக்காய்வாளர் நாயகம் நியமிக்கப்பட்டிருப்பது சரியான பாதையில் பயணிப்பதற்கான முக்கிய நகர்வாகும்.
அதேவேளை, அரசமைப்பின் பிரகாரம் ஸ்தாபிக்கப்பட்ட அரசமைப்புப் பேரவையானது சமநிலையான ஆட்சியியல் நிர்வாகத்தின் அடிப்படைத் தூணாகும். அதன்படி வெவ்வேறு அரசுகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமது நிலைப்பாடுகள் மற்றும் அரசமைப்புசார் கோட்பாடுகளில் உறுதியாக நின்று, தற்போது பதவிக்காலம் நிறைவடைந்து செல்லும் மூன்று சிவில் சமூக உறுப்பினர்களை நாம் பெரிதும் பாராட்டுகின்றோம்.” – என்றுள்ளது.
