யாழ்ப்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி. தலைமையிலான குழுவினர் சந்திப்பு – மீனவர் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினருக்கும், யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளிக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில், இந்திய இழுவைமடிப் படகு மீனவர்களால் நயினாதீவு மீனவர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்தும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் பற்றியும் இந்திய துணைத் தூதுவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்திய அரசின் நிதியுதவியுடன் நயினாதீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சூரியகல மின் உற்பத்தித் திட்டம், அதனுடன் தொடர்புடைய வீதி அபிவிருத்தி, வங்களாவடி மற்றும் துறைமுக அபிவிருத்திகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன், வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார், உப தவிசாளர் கணபதிப்பிள்ளை வசந்தகுமாரன், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் செல்லப்பா பார்த்தீபன், மங்களேஸ்வரன் கார்த்தீபன், நயினாதீவு கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.