“செத்து பிழைத்த தொழிலாளி”: தகனம் செய்யப்பட்ட நபர் உயிருடன் வீடு திரும்பிய அதிசயம் – மேகாலயாவில் நிகழ்ந்த மர்மம்!

மேகாலய நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் பலியானதாக கூறப்பட்ட தொழிலாளி ஒருவர் உயிருடன் வீடு திரும்பியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேகாலயத்தின் கிழக்கு ஜெயின்டியா மலை மாவட்டத்தின் தாங்ஸுகு பகுதியில் செயல்பட்டுவந்த சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி திடீரென வெடிவிபத்து நேரிட்டது. சுரங்கம் இடிந்ததில் ஏராளமான தொழிலாளா்கள் உள்ளே சிக்கினா். விபத்தைத் தொடா்ந்து, தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினா், சிறப்பு மீட்புக் குழுவினா் உள்ளிட்டோா் பெரிய அளவில் மீட்புப் பணியை மேற்கொண்டனர்.

இடிபாடுகளில் இருந்து 31 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. பின்னர் அவை அனைத்தும் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிலையில் சுரங்க வெடி விபத்தில் பலியானதாக கூறப்பட்ட அசாமைச் சேர்ந்த தொழிலாளி உயிருடன் வீடு திரும்பியுள்ளார். ஸ்ரீபூமி மாவட்டத்தின் முலியாலா கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு தொழிலாளி ஷியாம்பாபு சிங்ஹா(44) வியாழக்கிழமை வந்தார்.

சுரங்க விபத்தில் அவர் பலியாகிவிட்டதாகக் கூறி குடும்பத்தினரால் ஒரு உடல் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டு பின்னர் தகனமும் செய்யப்பட்டுவிட்டது. ஆனால் அவர் உயிருடன் வீடு திரும்பியது குடும்பத்தினரையும் அதிகாரிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மேகாலய மற்றும் அசாம் போலீஸார் இணைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளன.

இதனிடையே சுரங்க விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானோரின் முகங்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சேதமடைந்திருந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.