பிரிட்டன் எப்போதும் துணையாக நிற்கும்! – தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் உறுதியளித்தார் டேவிட் லம்மி.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லம்மி மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் ஆகியோருக்கும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்றுப் பிற்பகல் கொழும்பில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது, ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் தேசிய இனப்பிரச்சினை மற்றும் அதற்கான நிரந்தர அரசியல் தீர்வுத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.

குறிப்பாக, இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி மற்றும் தமிழ்ச் சமூகம் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து தமிழ்ப் பிரதிநிதிகள் பிரித்தானிய தூதுக்குழுவினருக்கு விளக்கமளித்தனர்.

அர்த்தமுள்ள முன்னேற்றங்களுக்கு ஆதரவளிக்கவும், நீதி மற்றும் சமத்துவத்தை ஊக்குவிக்கவும் ஐக்கிய இராச்சியம் உறுதியாக இருப்பதாக துணைப் பிரதமர் டேவிட் லம்மி இதன்போது தெரிவித்தார்.

மேலும், தமிழ் மக்களின் குரல் சர்வதேச மட்டத்தில் தொடர்ந்து ஒலிப்பதை உறுதி செய்யவும், இன நல்லிணக்கம் மற்றும் நீதியை நிலைநாட்டும் விடயங்களில் தமிழர்களுடன் பிரித்தானியா எப்போதும் துணை நிற்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.