புதிய அரசமைப்பை பூஜ்ஜியத்திலிருந்து தொடங்க வேண்டிய அவசியம் இல்லை – பழைய வரைவுகளே அடிப்படை என நீதி அமைச்சர் ஹர்ஷன சுட்டிக்காட்டு.

புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளை ஆரம்பத்திலிருந்தோ அல்லது பூஜ்ஜியத்திலிருந்தோ தொடங்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தயாரிக்கப்பட்ட வரைவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பணிகளைத் தொடர முடியும் என்றும் ஊடகங்களிடம் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நீதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியால் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிக்கு அமைவாக, புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகள் நிச்சயம் முன்னெடுக்கப்படும் என்றும் நீதி அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.

இது குறித்து அவர் மேலும் விளக்குகையில்:-

“புதிய அரசமைப்புக்காக நாம் மீண்டும் ஆரம்பத்திலிருந்து பணிகளைத் தொடங்க வேண்டியதில்லை. கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரால் தயாரிக்கப்பட்ட பல வரைவுகள் மற்றும் ஆவணங்கள் ஏற்கனவே கைவசம் உள்ளன. அவற்றைப் பரிசீலித்து, சிறந்த அம்சங்களை உள்வாங்கி இந்தப் பணிகளைத் தொடர முடியும்.” – என்றார்.

அரசைப் பாதுகாக்கும் புதிய சட்ட வரைவும் (பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் போன்றவை) கூட முற்றிலும் புதிதாக உருவாக்கப்படாமல், முன்னைய வரைவுகளின் அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டது என்பதை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார்.

கடந்த கால வரைவுகளை அடிப்படையாகக் கொண்டு பணிகள் முன்னெடுக்கப்படும் என்று கூறிய போதிலும், அரசமைப்பு உருவாக்கப் பணிகளை நிறைவு செய்வதற்கான துல்லியமான காலவரையறை குறித்து இப்போதைக்கு உறுதியாகக் கூற முடியாது என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.