உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்: மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்ட சுரேஷ் சலே.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளில், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று இந்த விடயம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்தத் தகவலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுரேஷ் சலேவை 90 நாள்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்குப் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இத்தகைய பின்னணியிலேயே, இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணைகளில், புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டிருப்பது அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
